Sunday, November 7, 2010

வா குவாட்டர் கட்டிங் திரை விமர்சனம் - Va Quarter Cutting Tamil Movie Review

சென்னையில் ஜல் புயல் ஞாயிறு இரவு கரையை கடக்கும் என்று தொலைக்காட்சி செய்தியில் கூறிக்கொண்டு இருந்தார்கள். அதையும் மீறி என் அம்மா, "டேய், மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது, இந்த நேரத்துல உனக்கு சினிமா என்ன தேவை?" என்று கேட்டார்கள். அதெல்லாம் முடியாது டிக்கெட் முன்பதிவு செய்தாசுன்னு சொல்லி, அம்மா செய்த பிரியாணி கூட சாப்பிடாமல் இந்த படத்துக்கு சென்னை மாயாஜால் திரை அரங்கிற்கு நாங்கள் நண்பர்கள் நாலு பேர் சென்றோம்.
மாயாஜாலில் ஏற்கனவே பத்து திரைகள், அது இல்லாமல் மேலும் நான்கு திரைகள் திறந்துள்ளார்கள். அந்த புது திரை ஒன்றில் சென்று அமர்ந்தேன்.

இண்டர்வல் விட்டார்கள், பொதுவா, டாய்லெட் சென்று விட்டு , பாப்கார்ன், அல்லது குடிக்க ஏதாவது வாங்கி விட்டு தான் வந்து உட்காருவோம். ,ஆனால், அப்போது நண்பரில் ஒருத்தர், "இதுக்கு மேல இந்த படத்த பாக்கணுமா...." என்று சொல்லி முடிக்கவில்லை.. அனைவரும் அடுத்த நிமிடமே கொட்டும் மழையில் மறுபடியும் ஓடி வந்து வாகனத்தில் அமர்ந்து சென்னையை நோக்கி பறந்தோம்.

என்ன?, படத்தை பற்றி எதுவுமே சொல்லவில்லை என்று பார்கிறீர்களா? என்னத்த சொல்ல.. ???

இனிமேல் இந்த புஷ்கர்-காயத்ரி இயக்கிய படத்திற்கு செல்ல கூடாது என்ற ஒரு உறுதியான தீர்மானத்தை எடுத்து விட்டேன். அது என்னவோ தெரியல இந்த விளமபர பட இயக்குனர்கள் இரண்டு நிமிட படங்களை நன்றாக எடுக்கிறார்கள், இரண்டு மணி நேர படத்தை நன்றாக கொண்டு சொல்ல தெரியவில்லை. எனக்கு தெரிஞ்சு, இந்திய சினிமாவுல அப்படி விளம்பர படத்துல இருந்து பொது சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் யாரும் இல்லை தான் என்று தோன்றுகிறது.
இது தான் கொடுமைன்னு பார்த்தா.. மாமன் பெற கேடுக்குறதுகுன்னே ஒரு இசையமைப்பாளர், ஜி.வி.பிரகாஷ் குமார். ஒரு பாட்டு கூட சொல்ற மாறி இல்லை.
நடித்தவர்களில், சிவாவை நினைச்சா தான் பாவமா இருக்கு, தெரியாம இந்த படத்துல வந்து மாட்டிகிட்டார் போல. அவுரு என்னவோ குடுத்த வேலைய தான் செஞ்சு இருக்கார்.
படத்தின் ஒளிப்பதிவு மட்டுமே சூப்பர் என்று சொல்லலாம்.

சாதாரணமாவே நான் விமர்சனம் எழுதும் போது கதை எழுத மாட்டேன்.. கதை இல்லாத படத்துக்கு நான் என்ன கதை எழுத?

வா குவாட்டர் கட்டிங்... -------வா....குவாக்(வாந்தி) கட்டிங்...

உத்தமபுத்திரன் திரை விமர்சனம் - Uthamaputhiran Movie Review



டிரைலர்களை பார்த்து கொஞ்சம் எதிர்பார்ப்பு கம்மியாக தான் சென்றேன் இந்த படத்துக்கு.
முதல் பாதி என்னவோ கொஞ்சம் கிளிஷே காட்சிகளுடன் செல்லும் படம், தெலுங்கு பட ரீமேக் என்பதை நன்றாக நினைவூட்டும்.
ஆனால் பின்பாதியில் காட்சிகள் கொஞ்சம் சிரிப்பு மூட்டத்தான் செய்கிறது. முக்கியமாக விவேக் நடிப்பு. சமீபகாலமாக விவேக் தனது தனித்தன்மை நடிப்பை இழந்து வருவது போன்று தெரிந்தது, அனால் இந்த படத்தில் எமோசனல் ஏகாம்பரம் வேடத்தில் செம்ம ராவடி செய்து இருக்கிறார். விவேக் ஒரு புதிய நடிப்பு பரிணாமத்தில் நடித்து இருக்கிறார்.
படத்தில் ஏகப்பட்ட நடிகர் பட்டாளம். பாக்யராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, அம்பிகா, என்று தெரிந்த பழைய முகங்கள் பல.
ஜெனிலியாவுக்கு நடிக்கும் வேலை இதில் மிக மிக கம்மி. ஏதோ தெலுங்கில் நடித்ததுக்கு மறுபடியும் இழுத்து வந்து இருப்பாங்க போல..
தனுஷ்.. வழக்கம் போலவே நடித்து இருக்கிறார். ஆனால் இவர் இல்லை என்றால், இரண்டாம் பாதி விவேக் காமெடிகள் அவ்வளவு கலை கட்டி இருக்காது. தனுஷ்-விவேக் காம்பினேசன் காமெடி இந்த படத்தில் இன்னும் கொஞ்சம் டெவலப் ஆகித்தான் இருக்கிறது.
ரீமேக் படம் என்பதால் , இயக்குனருக்கு பெரிய வேலை இருந்தது போல தெரியவில்லை.
பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி நினைவில் கொஞ்சம் கூட நிற்கவில்லை. விஜய் அன்டனி என்று டைட்டில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.

படம் என்னவோ ரொம்ப நீளம், மூன்று மணி நேரம் தாண்டியும் ஓடுகிறது. அதை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.

படத்தில் குறிப்பிட்ட ஒரு ஜாதி பெயரை அதிகம் குறிப்பிட்டு இருகிறார்கள். இந்த விஷயம் இப்போதைய தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்த ஒரு விஷயம். அதை தவிர்த்து இருக்கலாம். தெலுங்கில் தான் ரெட்டியும், நாயடுவும் தவிர்க்க முடியாத பெயர்கள் அதற்காக தமிழிலும் அது போல் சேர்க்க வேண்டுமா?

சூரிய குடும்பம், நிதி குடும்பங்கள் வெளி இடாததால், படம் நல்ல இருக்காது என்று நினைக்க வேண்டாம்.

உத்தமபுத்திரன், குடும்பத்துடன் சென்று கல கலவென பார்க்கலாம்.
அது சரி இந்த படத்துக்கு எடுக்கு உத்தமபுத்திரன் என்று தலைப்பு என்று எனக்கு கடைசி வரை புரியவில்லை.

Friday, November 5, 2010

மைனா திரை விமர்சனம் - Mynaa: Tamil Movie Review


இந்த வருட தீபாவளி ரிலீஸ்களிலேயே கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகம் ஏற்படுத்திய படம்.
இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னரே சினிமா துறையில் முக்கியமானவர்களுக்கு எல்லாம் பிரிவியு காட்சி போடப்பட்டது. பார்த்து விட்டு சில பேர் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தது போல அப்படி ஒன்றும் இந்த படத்தில் இல்லை.
ஒரு வித்தியாசமான படம் வெற்றி பெற்றால் அதே பாணியில் படங்கள் எடுப்பது நம் தமிழ் சினிமாவில் காலம் காலமாக நடப்பது.
இது, பருத்திவீரன் கதை பாதிப்பில் வந்த திரைப்படம்.
வித்தியாசம் என்று சொல்வதற்கு, ஒன்றும் தனித்தன்மை பெரிதாக இல்லை. சாதாரண காதல் கதை தான். அதை மனசில் பதிய வைக்க இயக்குனர் மிகவும் மெனக்கெடுகிறார் , ஆனால் பருத்திவீரன் போல கிளைமாக்ஸ் வைத்தால் படம் ஹிட்டு என்று தப்பு கணக்கு போட்டு, செயற்கையான கிளைமாக்ஸ் அமைத்து சொதப்பல் ஆக்கி இருக்கிறார். சில பேருக்கு அது பிடித்தது, என்னைப்போல் வித்தியாசத்தை நம்பி சென்றவர்க்கு வெறும் ஏமாற்றமே.

திரைக்கதை வேண்டுமானால் அருமை என்று சொல்லலாம். ஆனால் அதிலும், சில காட்சிகள் கொஞ்சம் தேவை இல்லாதது. ஜுராசிக் பார்க் 2 -ஆம் பாகத்தில், அந்த வேன் தொங்கும் காட்சி போல, விறுவிறுப்புக்காக காபி அடித்து இருக்கிறார்கள்.
போலீஸ்காரராக வரும் தம்பி ராமையா நடிப்பு அற்புதம், அங்கங்கே சிரிக்க வைக்கிறார். போலீஸ் வேலை பார்பவரின் வேதனையை இந்த கதாபாத்திரம் மற்றும் அந்த ஜெயிலர் கதாபாத்திரத்தில் காண்பித்து இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

இசை இமான். இந்த படம் மூலம் சற்று ஒரு படி ஏறித்தான் இருக்கிறார். பாடல்கள் கொஞ்சம் சுமாராக இருந்தாலும், பின்னணி இசையில் சிக்சர் அடிக்கிறார்.
ஹீரோயின் அநாகா, நன்றாக நடிக்கிறார், அதுவே ஆறுதல் தரும் விஷயம். மேக்கப் பெரிதாக இல்லை. இருந்தும் அழகாக இருக்கிறார். தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டோம் என்ற சந்தோசத்தோடு, சென்னை தேவி திரை அரங்கில் முதல் காட்சி பார்த்து விட்டு வெளியில் வந்த அவரை பார்த்த போதே தெரிந்தது.
ஹீரோ நன்றாக நடிக்கிறார், ஏனோ மனதில் பதியவில்லை.

இயக்குனர் பிரபு சாலமன், தனது முந்தய முயற்சிகளில் சற்று சறுக்கி இருந்தாலும் , இந்த படம் கொஞ்சம் அவருக்கு பெயர் கொடுக்கும் என்று சொல்லலாம். தீபாவளி வெளியீட்டில் கொஞ்சம் ஆறுதல் தரும் திரைப்படம் மைனா, என்று நண்பர்கள் சொன்னார்கள். அதனால் படம் நிச்சயமாக தோல்வி அல்ல! ஜஸ்ட் பாஸ் மார்க் வாங்கி தப்பி கொள்ளும் என்று நினைக்கிறேன்.

மைனா உயரே பறக்க ஆசைப்பட்ட குருவி!

Saturday, October 2, 2010

எந்திரன் திரை விமர்சனம் -ENDHIRAN(ROBOT) Movie Review

இந்த விமர்சனத்தில் எந்திரன் கதை பற்றி கூறவில்லை, அதனால், தைரியமாக படித்துவிட்டு, சுவாரஸ்யம் குறையாமல் திரை அரங்கு சென்று படத்தை பார்க்கலாம்.

சமீபத்தில் வெளிவந்த.. தமிழ் படங்களில், கந்தசாமி ஆகட்டும், ராவணன் ஆகட்டும், ஆயிரத்தில் ஒருவன் ஆகட்டும், பெரிய அளவில் பேசப்பட்டு வெளிவந்து, பெரிய அடிபட்டு திரை அரங்கை விட்டு வெளியே விரட்டப்பட்டது.
எதுவுமே, ரசிகர்களின் எதிர்பார்ப்பு பசிக்கு தீனி போட முடியாமல், பாக்ஸ் ஆபிசில் கல்லா நிரப்பவில்லை.
ஆனால், அப்படிப்பட்ட படங்களின் மத்தியில் , ரசிகர்களின் எதிர்பார்ப்பை, கொஞ்சமும் சங்க வைக்காமல், ஒரு (ஹாலிவுட் என்று சொல்ல மாட்டேன், ஏனென்றால் ஹாலிவுட் மட்டுமே உலக சினிமா அல்ல) உலக சினிமாவை கொடுத்து இருக்கிறார் ஷங்கர்.
கடந்தமுறை இதே ப்ளாகில் நான் இன்செப்சன் பட திரை விமர்சனம் எழுதிய போது என்ன மன நிலையில் இருந்தேனோ, அதே போல ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியில் எழுதுகிறேன்.
இந்த படம் இன்செப்சன் மற்றும் என்னை கவர்ந்த மற்ற ஹாலிவுட் திரைப்படங்களை தாண்டி, என்னை பாதிக்கும் ஒரு படம். அதற்கு இரண்டு காரணங்கள் , ஒன்று இது என் தமிழ்மொழி திரைப்படம்.. இன்னொன்று எங்கள் சூப்பர் ஸ்டார் நடித்த படம்.


ரஜினி
படத்தில் ஒருகாட்சியில் கூட நீங்கள் ரஜினியை பார்க்காமல் இருக்க முடியாது. ஏன், ஒரு ரஜினி மட்டும் அல்ல, இரண்டு ரஜினிக்கு மேலும் சில காட்சியில் காண்பீர்கள்.
இது வரை ரஜினிக்கு நடிக்க தெரியாது, வெறும் ஸ்டைல் மட்டும் தான் என்று நினைப்பவரா நீங்கள்? இந்த படம் பார்த்து விட்டு அந்த என்னத்தை மாற்றிக்கொள்வீர்கள். மிக மிக நீண்ட நாட்களுக்கு பிறகு, பரட்டை, நெற்றிக்கண் வில்லன் ரஜினியை காணலாம். மனுஷனுக்கு 60 வயசுக்கு மேல் என்றால் நம்ப முடியவில்லை. பின்னி பெடல் எடுக்கிறார். முக்கியமாக, அந்த "பே.." கருப்பு ஆடு கண்டு பிடிக்கும் சீன், படம் பாருங்க அப்போதான் புரியும்.
அதே சமயம் விஞ்ஞானி ரஜினி, ரோபோ ரஜினி இரண்டிற்கும் வேறுபட்ட நடிப்பில் நாம் இது நிஜமாகவே ரெண்டு ரஜினி தான் என்று நினைக்க தோன்றும். படம் பார்த்து முடித்து விட்டு வரும் யாரை வேண்டுமானாலும் நீங்கள் கேட்டு பாருங்கள், உங்களுக்கு விஞ்ஞானி ரஜினி பிடித்ததா இல்லை ரோபோ ரஜினி பிடித்தா? என்று, "விஞ்ஞானி ரஜினி அப்படி ஒன்னும் இல்லை சார், ரோபோ ரஜினி தான் சூப்பர்" என்று பட்டுன்னு சொல்வார்கள் . அந்த அளவுக்கு ரோபோ ரஜினி கவர்கிறார். பாடல் காட்சிகளில் கூட ரஜினி ரொம்ப ஸ்மார்டாக இருக்கிறார். கொஞ்சம் நடனம் கூட செய்கிறார். இது வரை நாம் பார்க்காத ரஜினி டான்ஸ். சில இடங்களில் கிராபிசில் ஆட வைத்தாலும் கூட ரசிக்கும்படியாகவே உள்ளது.

ஷங்கர்,
தன்னுடைய கனவு திரைப்படம் என்று பார்த்து பார்த்து வேலை செய்த உழைப்பு நிச்சயம் தெரிகிறது. ஏற்கெனவே இந்தியாவின் சிறந்த இயக்குனர் என்று சொல்லப்படும் பெயர்களில் ஷங்கர் என்னும் பெயரை இன்னும் அழுத்தமாக உச்சரிக்கும் படி செய்து விட்டார்.. யார் யாரோ, நான் வித்தியாசமான திரைப்படம் எடுக்கிறேன் என்று சொல்லி மகா மெகா சொதப்பல் செய்து கொண்டு இருக்கும் இந்த வேலையில், ஷங்கர் தன் மார் தட்டி நான் வித்தியாசமான படம் எடுத்தேன் என்று சொல்லிகொள்ளலாம். அந்நியன், பாய்ஸ் திரைபடத்தில் மிஸ் ஆனா இந்தியன், ஜென்டில்மேன் ஷங்கர் இந்த படத்தில் மீண்டும் ப்ரெசென்ட். என்னதான் வெளி நாடு சென்று எல்லோரும் பாடல் காட்சியை படம் பிடித்து வந்தாலும், ஷங்கர் எடுத்தால் அது ஒரு தனி பிரம்மாண்டம் தான். காதல் அணுக்கள், கிளிமஞ்சாரோ பாடல்களில் வரும் இடங்கள், கொள்ளை அழகு மற்றும் பிரம்மாண்டம். இரும்பிலே பாடல் ஸ்டுடியோவிலும், கிராபிக்சிலும் எடுத்ததால், பிரம்மாண்டம் கொஞ்சம் குறைவது போல் தெரிகிறது. ஆயிரம் ரஜினி வரும் அரிமா அரிமா பாடல் கொஞ்சம் வாய் பிளக்க தான் செய்கிறது.
ஆனால், என்னதான் ஷங்கர் கதையாக இருந்தாலும், சுஜாதா என்னும் ஒரு நிஜ விஞ்ஞானி இல்லை என்றால் அந்த டெக்னிகல் விஷயங்கள் இவ்வளவு நுணுக்கமாக ஷங்கரால் செய்து இருக்க முடியாது தான், என்று நம்மை நினைக்க தோன்றுகிறது. கடவுள் இருகிறாரா? என்று கேட்கப்படும் காட்சியிலும், பிரசவ காட்சியிலும் நம்மை கொஞ்சம் சிலிர்க்கத்தான் வைக்கிறார்கள்.

ஏ.ஆர்,ரஹ்மான்.
பாடல்களில் ஏற்கெனெவே அவர் யார் என்று நமக்கு காண்பித்து விட்டார். பின்னணி இசையை மட்டும் விட்டு வைப்பாரா என்ன? இசை தட்டுகளில் வராத பிட்டு இசைகள் படத்தில் நிறைய. குறிப்பாக அந்த கார் சண்டை காட்சியில் வரும் ஒரு பின்னணி இசை அற்புதம். சீக்கிரம் இணையத்தில் ஒரு சுற்று வரும், அந்த பிட்டு மியுசிக். மேலும் படம் முடியும் தருவாயில் கவனித்து பார்த்தல் தெரியும், சிம்பொனி இசை. ஆஸ்காரை சும்மாவா குடுத்தார்கள்.

ஐஸ்வர்யா ராய்,
கதைக்கு தேவையான கதாபாத்திரம் தான். இயந்திர மனிதனே மயங்கி காதலிக்கும் ஒரு கதா பாத்திரத்தில், இவரை தவிர வேறு யாரையாவது போட்டு இருந்தால், செம்ம காமெடி ஆகி இருக்கும். நீண்ட நாட்களாக சொல்லிக்கொண்டு இருந்து கடைசியாக , நம்ம சூப்பர் ஸ்டாரும் ஐஸ்வர்யா ராயும் இணைந்து நடித்து விட்டார்கள். இரண்டு பேரும் திரையில் ஜோடி பொருத்தம் கண கச்சிதம், இந்த கெமிஸ்ட்ரி என்பார்களே அது நிறைய...(சாரி அபிஷேக் பச்சன்)

படத்தில் மேலும் சொல்லும் படியான ஆட்கள், ஒளிபதிவாளர் ரத்தினவேலு, கலை இயக்குனர் சாபு சிரில்(படத்தில் ஒரு காட்சியில் கூட வருகிறார்), ரேசூல் பூக்குட்டி, பீட்டர் ஹைன். இன்னும் நிறைய.

முக்கியமாக, டப்பு குடுத்த கலாநிதி மாறன். இவர் இல்லை என்றால் இப்படி ஒரு பிரமாண்டம் தமிழ் சினிமாவில் நாம் கண்டு இருக்கவே முடியாது.

படத்தை ஒவ்வொரு முறையும் இவர்கள் ஒவ்வொருவருக்காகவும் பார்த்தால் கூட தப்பில்லை. அந்த அளவுக்கு அவர்கள் வியர்வை படம் முழுக்க காட்சிகளாய்.

சில பேர் படம் பார்த்து விட்டு,
படம் அப்படி ஒன்றும் இல்லை,
காதுல ரொம்ப பூ சுத்துறாங்க,
அல்லது ரொம்ப சிம்பிளா, படம் வேஸ்ட்.
அப்படி சொன்னார்கள் என்றால், அவர்களிடம் ஒரே ஒரு கேள்வி,
இதே படத்தை, ஒரு அர்னால்டோ, வில் ஸ்மித்தோ, அல்லது ஒரு லியோனர்டாவோ நடித்து இருந்தால் இப்படி சொல்வீர்களா?
இது நம்ம படம் பாஸ். நம்ம தமிழ்மொழிப்படம் பாராட்டுங்க!


சில கிராபிக்ஸ் சொதப்பல்கள், இரண்டாம் பாதியில் ஓவர் டோஸாக இருக்கும் சண்டை காட்சிகள் என்று சில சின்ன சின்ன குறைகள் இருந்தாலும்.
எந்திரன் நிச்சயம் ஆஸ்கார், மற்றும் உலக சினிமா விருதுகள் கதவை தட்டும்.

Thursday, September 16, 2010

கொமரம் புலி(தெலுங்கு) திரை விமர்சனம் : Komaram Puli Movie Review

நான் சாதரணமாக தெலுங்கு படங்களை பார்ப்பதுண்டு. அதிலும் முக்கியமாக சிரஞ்சீவி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் திரைப்படங்களை காண்பேன்.
சொல்லபோனால் அல்லு அர்ஜுனும், மகேஷ் பாபுவும் வந்த பிறகு தான் தெலுங்கு சினிமாவில், சில நல்ல மாற்றங்கள் ஏற்பட்டது.
நான் கடைசியாக ரசித்த படம் மகதீரா. பெரிய பொருட்செலவில், நல்ல திரைக்கதை அமைப்போடு வந்த திரைப்படம். ஆந்திராவில் பல வசூல் சாதனை படைத்தது.
இப்போது , நண்பருடன் கொமரம் புலி படத்தை பார்த்தேன்.
நமது எஸ்.ஜெ.சூர்யா இயக்கத்தில், நம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, சிரஞ்சீவி தம்பி பவன் கல்யான் நடித்த படம்.

கதை என்னவோ , நாம் தமிழ் சினிமாவில் பார்த்து புளித்து போன கதைதான் , ஹீரோவின் தந்தை நேர்மையான போலீஸ், வில்லனால் கொலை செய்ய படுகிறார், தாய் வைராக்யத்துடன் தன் மகனை பெற்று, வளர்த்து, போலீஸ் ஆக்குகிறார். வழக்கம் போல ஹீரோவும் ஒரு நேர்மையான போலீஸ் ஆபிசர். முதல்வன் படத்தில் வரும் புகார் பெட்டி போல, இதில் புகார் டெலிபோன் பூத் வைத்து மக்கள் குறைகளை போக்குகிறார். ஒரு வழியாக வில்லன் குறுக்கில் வர , நிறைய மோதி, கடைசியாக, புதிய பலி, பழைய பலி எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு முடிவுக்கு வந்து, சுபம் கார்ட் போடுகிறார்கள்.

படம் முழுக்க தும்மல் வரும் அளவுக்கு மசாலா தூக்கலாக தான் இருக்கிறது. என்ன பண்ணுவது அது தெலுங்கு படத்துக்கே உரித்தான ஒரு பாணி. தெலுங்கு மக்கள் என்னவோ மாறிட்டாங்க தான் , அங்கே படம் எடுப்பவர்கள் தான் இன்னும் அதே பாணியில் படம் எடுத்து கொல்லுகிறார்கள்.

திரைக்கதை என்னவோ ஆங்காங்கே நன்றாக போனாலும், பல இடங்களில் சறுக்குகிறது. முக்கியமாக நம்ம எஸ்.ஜெ.சூர்யாவின் டிரெட்மார்க் சில்மிஷ காட்சிகள் ரெண்டு மூணு வருகிறது(அதில் ஒரு காட்சி நம்ம "அ ஆ" படத்தில் வரும் காட்சியின் ரீமேக்) , அது வரும் போதெல்லாம் தியேட்டரில் மக்கள் முகம் சுளிக்கவே செய்கிறார்கள். அதே போல எஸ்.ஜெ.சூர்யா சில நாட்கள் படம் ஏதும் இல்லாமல் வீட்டில் உட்கார்ந்து ஆங்கில படங்களை பார்த்து இருப்பார் போல இருக்கு, அதை அப்படியே இந்த படத்தில் காப்பி அடித்து போட்டு இருக்கிறார் .
உதாரணதுக்கு, ஹீரோவின் தாய் சரண்யா கிணற்றில் குழந்தை பெற்றுக்கொள்ளும் காட்சி அப்படியே மெல் கிப்சனின் அபோகேளிப்டோ (Apocalypto) படித்தில் வரும் காட்சியின் அப்பட்டமான காப்பி.
மேலும் ஹீரோ அறிமுக காட்சியில் வரும் சண்டை காட்சி, எதோ லோ பட்ஜெட் சைனீஸ் படத்தில் பார்த்தது போன்ற ஞாபகம். இது போல படத்தில் நிறைய காட்சிகள் உள்ளன.

பவன் கல்யான் கச்சிதமாக நடித்து இருக்கிறார் . ரொம்ப சிரத்தை எடுத்து நடித்து இருபது கண்கூடாக தெரியும். ஆனா என்ன, நிறைய இடங்கள்ள நம்ம எஸ்.ஜெ.சூர்யா பேசுற மாறியே இருக்கும். அது முற்றிலும் இயக்குனரின் வேலைதான் . பொதுவாக எல்லா எஸ்.ஜெ.சூர்யா படங்களில் , ஹீரோவை அவரை மாறி தான் பேசவைப்பார்.

ஹீரோயின் நிகிஷா பட்டேல், புது முகம், பயங்கர அழகு. லேசாக நடிக்கவும் செய்கிறார் . தமிழுக்கு வந்தால் ஒரு ரவுண்டு வரலாம். காத்திருப்போம்!

ஹீரோவின் அம்மாவாக நம்ம சரண்யா, இப்போது வரும் படங்களில் எல்லாம் அம்மா கேரக்டர்ணா இவங்களை தான் போடுறாங்க. அதே போல தன் வேலையை கச்சிதமாக செய்கிறார். படத்தில் பாராட்டுற அளவுக்கு நடித்தவர்னு சொல்ல போனா அது சரண்யா மட்டும் தான்.

நாசர், போலீசா வரார். சுத்தமா வேஸ்ட் பண்ணி இருக்காங்க.
வில்லன் மனோஜ் பாஜ்பாய், மிரட்டலா இல்லைனாலும், கரக்டா நடிச்சு இருக்கார்.
இது தவிர, ஸ்ரேயா ஒரு பாடலுக்கு, சரண்ராஜ், மற்ற எல்லாரும் எதுக்கு வராங்கன்னே தெரில.

இசை நம்ம ஆஸ்கார் புயல் ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.ஜெ.சூர்யா ரொம்ப தொல்லை பண்ணி இருப்பார் போல, பாடல்களை ஏனோதானோன்னு தான் போட்டு இருக்கார். பின்னணி இசை பரவாயில்லை.

இந்த படத்தை நான் முக்கியமாக பார்த்த காரணம், நம்ம விஜய் இந்த கதையில் நடிக்க வேண்டி இருந்தது. கடைசி நேரத்தில் கைவிட்டுவிட்டார். விஜய் வேண்டாம் என்று சொல்லி, சுமாராக ஓடிய படங்கள் என்று பார்த்தால் அநேகமாக இது ஒன்றாக தான் இருக்கும். சிங்கம் படத்தை கூட விஜய் வேண்டாம் என்று தான் சொன்னாராம். கடைசியில் சூர்யா நடித்து, படம் ஓஹோவென ஓடி தீர்தது. சரி, விஜய் பற்றி வேற எப்பவாச்சும் பேசலாம்.
தெலுங்கில் வெற்றி பெற்றால் எஸ்.ஜெ.சூர்யா மீண்டும் தமிழில் வேறு ஹீரோவை வைத்து எடுப்பதாக இருந்தாராம். படம் சரியாக போகாததால், அநேகமாக அந்த என்னத்தை டிராப் செய்து இருப்பார்.

ஆண்டவன் புண்ணியத்தில், ஆந்திராவில் படம் ஒரு அளவுக்கு சுமார ஓடிட்டா பரவாயில்லை, இல்லேன்னா, எஸ்.ஜெ.சூர்யா படம் இயக்குவதை விட்டுட்டு, மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவரும் அபாயம் இருக்கிறது. உஷார்!

Monday, September 13, 2010

பாஸ் (எ) பாஸ்கரன் திரை விமர்சனம் - Boss (a) Baskaran Movie Review

களவாணி, நான் சமீப காலத்தில் ரசித்து பார்த்த அற்புதமான திரைப்படம். திரைக்கதை எள் அளவும் சுவாரஸ்யம் குறையாமல் எடுக்கப்பட்ட திரைப்படம். அந்த திரைப்படம் பற்றி விமர்சனம் எழுத நினைத்து, பிறகு மிகவும் கால தாமதம் ஆனதால், இதற்கு அப்புறம் எழுதினால் ரொம்ப பழைய விமர்சனம் ஆகி விடும் என்ற காரணத்தால் அப்படியே கைவிட்டுவிட்டேன்.

களவானிக்கு பிறகு, நான் ரசித்து பார்த்த படம் பாஸ் (எ) பாஸ்கரன்.
இந்த படமும் படம் பார்ப்பவர்களை சற்றும் போர் அடிக்காமல், முழு நக்கல் நய்யாண்டி வசனங்களோடு எடுத்த படம். சந்தானம், இந்த படத்தின் இன்னொரு ஹீரோ என்று சொல்லுமளவுக்கு, படம் முழுக்க, ஹீரோ ஆர்யாவுடனே பயணிக்கும் ஒரு கதாபாத்திரம். ஆகவே இது சந்தானத்தை மட்டுமே நம்பி பின்னப்பட்ட திரைக்கதை.

கதை ரொம்ப சாதாரணம் தான்,
ஹீரோ ஆர்யா , யார் பேச்சும் கேட்காமல், அரியர்ஸ் வைத்துக்கொண்டு ஊர் சுற்றும் பையன். பார்த்தவுடன் நயன்தாராவுடன் காதல். தன் திருமணம் பற்றி பேச போக, வெட்டியாக சுத்துவதை மற்றவர்கள் சுட்டி காட்ட, சபதம் ஏற்று, வீட்டை விட்டு வெளியே வருகிறார், திரும்பவும் தன் சபதத்தில் ஜெயித்தாரா என்பது தான் மீதி கதை.
திரைக்கதை தான் இந்த படத்தின் முதுகெலும்பே, அது மட்டும் இல்லை என்றால், இது மற்ற படங்களை போல படு மொக்கையாக போய் இருக்கும்.

மிக நீண்ட நாட்கள் பிறகு ஆர்யா ஒரு ஜாலியான கதாபாத்திரம் ஏற்று இருக்கிறார். அதில் பக்காவாக ஸ்கோர் செய்கிறார்.

நயன்தாரா பாவம், ஏதோ நோய் போல, மிகவும் பரிதாபமாக காட்சி அளிக்கிறார். அய்யா, வல்லவன் போன்ற படங்களில் நாம் பார்த்த அழகு கொலு கொலு நயன் இனி நாம் எங்கு தேடினாலும் கிடைக்கமாட்டார் போல இருக்கு. கன்னம் ஒட்டி, புருவம் வரைந்து எதோ எயிட்ஸ் நோயாளி போல் காட்சி அளிக்கிறார். முன்பு தன் அழகால் நம் தூக்கத்தை கெடுத்த நயன், இன்று தன் பயானக முகத்தால் தூக்கத்தை கெடுக்கிறார்.

சந்தானம், இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். இவர் வரும் எல்லா காட்சியிலும் அரங்கம் அதிர்கிறது. முன்பு, கவுண்டமணி சாயலில் நடிப்பார் என்ற குற்றச்சாட்டு இருக்கும், இந்த படத்தில் அது துளியும் இல்லை. முழுக்க முழக்க இது சந்தானம் நடிப்பு என்று சொல்லும் அளவுக்கு நடிப்பில் நல்ல தேர்ச்சி. தொன்னூறுகளில், கவுண்டமணியை நம்பியே திரைப்படங்கள் எடுக்கப்பட்டு ஓடின, இது போல ஒரு வாய்ப்பு இனி சந்தானத்துக்கும் அமையும். இனி வரும் படங்களில் நிச்சயம், சந்தானம் ஒரு தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக இருப்பார்.

ஆர்யாவின் அண்ணனாக வரும் பஞ்சு அருணாச்சலத்தின் மகன், நல்ல நடிப்பை காட்டுகிறார். இனி தமிழ் சினிமாவின் ஹீரோக்களுக்கு நல்ல அண்ணன் கிடைத்துவிட்டார்.

ஆர்யாவின் அண்ணியாக வரும் விஜயலட்சுமி(பிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக வரும் நாயகி), இன்னும் அழகாக தான் இருக்கிறார், சொல்ல போனால் நயன்தாராவை விட திரையில் அழகாக தெரிகிறார். அண்ணி கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து இருக்கிறார்.

இது தவிர ஜீவா கௌரவ தோற்றத்தில் வந்து பின்னி பெடல் எடுக்கிறார். ஐந்தே நிமிடங்கள் வந்து ஒரு கலக்கு கலக்கி படத்தை முடிக்கிறார். நான் மிகவும் ரசித்த காட்சியில் ஒன்று "அங்கிள் அங்கிள், அப்பா கிட்ட சொல்லாதீங்க அங்கிள்". படம் பாருங்க அப்பொழுதான் அந்த காட்சியின் கலாட்டா உங்களுக்கு புரியும்.

படம் முழுக்க உள்ள நிறைய வசனங்கள் காலேஜ் யுத்களின் பேச்சுக்களில் சீக்கிரம் காண முடியும்.
"நண்பேண்டா" ஏற்கெனவே எஸ்.எம்.எஸ் களில் பறந்து கொண்டு இருக்கிறது.
மேலும், அந்த வெற்றி குறி மேட்டரும் ரொம்ப பிரபலம்.
எனவே இது முழுக்க முழுக்க இளசுகளுக்காகவே.

இடைவேளைக்கு பிறகு சில காட்சிகள் சற்று மெதுவாக செல்வது போல் இருக்கும், ஆனால் அது மற்ற விறுவிறுப்பு காட்சிகளின் பாதிப்பு என்று தான் சொல்லணும். ஆங்காங்கே ரெட்டை அர்த்த வசனங்கள், அதை சிறிது குறைத்து இருக்கலாம்.
எஸ்.எம்.எஸ் வெற்றிக்கு பிறகு, மீண்டும் ஒரு வெற்றி படம் எடுத்து உள்ளார் இயக்குனர் ராஜேஷ்.
ராஜேஷ், என் சொந்த ஊர் சேலத்தை சேர்ந்தவர் என்று நண்பர் சொன்னார். அப்படி இருந்தால் இன்னும் பெருமை. திரைக்கதையில், நிச்சயம் நன்றாக கொண்டு செல்லும் திறமை இருக்கிறது, அதே போல, கனமான கதையிலும் கவனம் செலுத்தினால், ராஜேஷை இன்னொரு பாக்யராஜ் என்று திரை உலகம் கொண்டாடும்.

ஆகா மொத்தம், பாஸ் (எ) பாஸ்கரன், காலேஜ் இளசுகள், நண்பர் கூட்டத்தோடு சென்று, கத்தி கலாட்ட செய்து பார்க்க வேண்டிய படம்.

Friday, September 10, 2010

இது ஆட்டோவா? இல்லை காரா?

சமீப காலமாக, சென்னை சாலையில நான் சில வித்யாசமான வாகனங்களை பார்க்கிறேன். அதிலும் சென்னையில் ஓடும், சில ஷேர் ஆட்டோக்கள் ரொம்பவே வித்யாசமாக தான் இருக்கிறது.
அதில் ஒன்று தான் இது.

நான் அண்ணா நகர் நூறு அடி சாலையில் பார்த்த வண்டி.
பின்னால் இருந்து பார்த்தால் ஒரு நிமிடம் அது கார் என்றே நினைக்க தோன்றும், கொஞ்சம் நெருங்கி வேறு கோணத்தில் இருந்து பார்த்தல் தான் அது ஒரு ஆட்டோ என்று தெரியும்.
கொஞ்சம் மப்புல பாத்தா , "என்னடா இது, காருக்கும், ஆட்டோவுக்கும் கூடவா கள்ள உறவு நடக்குது ? அட பாவிகளா?" அப்படீன்னு கன்பீஸ் ஆயிரும்.
நிச்சயம் இதை வடிவமைத்தவர் மற்றவர்களில் இருந்து தன்னை வேறுபடுத்தி காண்பிக்க கொஞ்சம் சிரத்தை எடுத்திருக்கிறார் என்பது போல் தான் தெரிகிறது.
போற போக்க பாத்தா நம்ம ஆளுங்க, ஏரோபிளேன் கூட டிசைன் பண்ணிருவாங்க போல இருக்கே??!